Saturday 12 October 2013

காலத் தூரிகை

ஊர் நினைவில் மிதப்பதற்கு
உயிர் விரும்பிக் கேட்கிறது
யார் முகங்கள், எவர் நினைவு
எழுந்து வரும்!, என அறிய
ஆசை தான் எனக்கும்,
ஆனாலும் உடனடியாய்
யோசித்த மாத்திரத்தில்
யுகத்தை முன் கொணர்தலெலாம்
வாய்ப்பில்லை, எனினுமுயிர்
வாய்விட்டுக் கேட்ட பின்னால்
ஏய்த்து, இழுத்தடித்தல்
எனக்கியலாதெனச் சொல்ல

உதட்டைக் கடித்து
ஓரமாய் விழி உருட்டி
பதட்டமின்றி மனத்தாள்
பாதையொன்றை வரைந்தாள்
ஆளற்று நீண்டு செலும்
அப்பாதை முடிவினிலே
நீலக் கடல் அகன்று
நிலம் தொட்டுப் புரள்கிறது
வானிலிருந்தெடுத்துத் தான்
வண்ணத்தைச் சேர்த்திருப்பாள்

எழுந்துவரும் என்னுடைய
ஏக்கப் பெருமூச்சை
இழுத்தெறிந்தாள் கடல் மேலே!
ஏதோ சில வெண்கோடாய்
இதன் படிமம், அப்போதே
ஆவியாய் கடல் கொஞ்சம்
அசைந்தெழுந்து வான் முட்ட
காவியத்தின் அதியுச்சக்
கட்டம் போல் விழியிருந்து
அஞ்சனத்தை எடுத்து
அப்பி விட்டாள் முகில்மேலே
பஞ்சு வண்ண முகில்
பாரமாகிக் கருக்கட்டி
பன்னீர்க் குடமுடைந்து
பளபளக்கும் துளிகளெந்தன்
கண்ணீரோடு சேர்ந்தென்
கன்னத்தில் உருளுகையில்

ஒவ்வொரு துளிகளிலும்
ஊரும், உறவுகளும்
எவ்வளவு இயல்பாக
என் முன்னே!, உயிரென்னை
கட்டி அணைத்துக்
கை இறுகப் பற்றியது
விட்டுன்னைச் செல்லேனென
விம்மியது, பூவுலகின்
காலக் கரைப்பானிந்தக்
களிமழைதான் காணென்று
கண்ணைத் துடைத்தென்னைக்
கட்டியது, காதோரம்

மழையன் பாடல்கள்
மண்ணீர மணத்தோடு
அளைந்தென்னைச் செல்கிறது
அள்ளி..

No comments:

Post a Comment